முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்


முன்னேற்பாடு பணிகள் குறித்து  ஆலோசனை கூட்டம்
x

ஒகேனக்கல்லில் 3 நாட்கள் ஆடிப்பெருக்கு விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் சாந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தர்மபுரி

ஒகேனக்கல்லில் 3 நாட்கள் ஆடிப்பெருக்கு விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் சாந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில் ஆடிப்பெருக்கு விழா நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 3 நாட்கள் கொண்டாடுவது குறித்து முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக நடத்த அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா நாளை முதல் 3 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விழாவையொட்டி பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனை விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

கலை நிகழ்ச்சிகள்

விழா நடைபெறும் 3 நாட்களிலும் சுற்றுலா துறை, சேலம் மண்டல, கலை பண்பாட்டுத்துறை, தென்னக கலை பண்பாட்டு மையம், பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை மற்றும் தன்னார்வலர்கள் மூலம் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழா சிறப்புற நடைபெற ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை அந்தந்த துறை அலுவலர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை, ஊராட்சிகள் உதவி இயக்குனர் மாலா, தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரிய மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் சாமுவேல் ராஜ்குமார், தர்மபுரி வேளாண்மை இணை இயக்குனர் முகமது அஸ்லாம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை உதவி இயக்குனர் மாலினி, மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜனார்த்தனன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story