அம்மிக்கல்லை தலையில் போட்டு பெண் கொலை: மனைவியுடன் சேர்ந்து வாழ தடையாக இருந்ததால் தீர்த்துக்கட்டியதாக மருமகன் வாக்குமூலம்


அம்மிக்கல்லை தலையில் போட்டு பெண் கொலை: மனைவியுடன் சேர்ந்து வாழ தடையாக இருந்ததால் தீர்த்துக்கட்டியதாக மருமகன் வாக்குமூலம்
x

திருச்செங்கோடு அருகே மனைவியுடன் சேர்ந்து வாழ தடையாக இருந்ததால் அம்மிக்கல்லை தலையில் போட்டு பெண்ணை தீர்த்துக்கட்டியதாக மருமகன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நாமக்கல்

எலச்சிபாளையம்:

காதல் திருமணம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கருவேப்பம்பட்டியை சேர்ந்தவர் கோகிலா (வயது 40). கணவனை பிரிந்து வாழும் இவருக்கு ஆர்த்தி (21) என்ற மகளும், வசந்தகுமார் (17) என்ற மகனும் உள்ளனர். ஆர்த்தி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு லாரி பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்த கார்த்திக் (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் திருச்செங்கோடு அருகே மாங்கொட்டை பாளையத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். திருமணமான ஒரு மாதத்தில் கார்த்திக்குக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஆர்த்தி தனது கணவரை பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். கார்த்திக் அடிக்கடி கோகிலாவிடம், ஆர்த்தியை குடும்பம் நடத்த அனுப்பக்கோரி கேட்டு வந்தார். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

பெண் கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் கோகிலா மட்டும் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு சென்ற கார்த்திக், மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த அனுப்புமாறு கேட்டார். அதற்கு கோகிலா மறுத்ததால், 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் கத்தியால் கோகிலாவை குத்தினார். இதில் அவர் கீழே விழுந்தார்.

பின்னர் அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்து கோகிலா தலையில் போட்டு கொலை செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு ரூரல் போலீசார் விரைந்து சென்று கார்த்திக்கை கைது செய்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட கோகிலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கைது செய்யப்பட்ட கார்த்திக் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தனிக்குடித்தனம் அனுப்ப மறுப்பு

நானும், ஆர்த்தியும் காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஆர்த்தி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அவரை பலமுறை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தேன். அதற்கு எனது மாமியார் கோகிலா தடையாக இருந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

சம்பவத்தன்று நான் கோகிலா வீட்டுக்கு சென்றேன். ஆர்த்தி, அவருடைய தம்பி வெளியே சென்றதால் கோகிலா மட்டும் தனியாக இருந்தார். அவரிடம் ஆர்த்தியை குடும்பம் நடத்த அனுப்பி வைக்கும்படி கேட்டேன். ஆனால் அவர் தனிக்குடித்தனம் நடத்த அனுப்ப முடியாது, நீ இங்கு எங்களுடன் இருந்து கொள் என்று கூறினார்.

சிறையில் அடைப்பு

திருமணமாகி 3 ஆண்டுகளாக மனைவியுடன் சேர்ந்து வாழ தடையாக இருப்பதால் கத்தியால் கோகிலாவை குத்தினேன். இதில் மயங்கி விழுந்த அவரது தலையில் அம்மிக்கல்லை தூக்கிப்போட்டேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இவ்வாறு கார்த்திக் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட கார்த்திக்கை திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை சிறையில் அடைக்க நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் அவரை சேலம் சிறையில் அடைத்தனர்.

திருச்செங்கோடு அருகே மனைவியுடன் சேர்ந்து வாழ தடையாக இருந்ததால் பெண் தலையில் அம்மிக்கல்லை போட்டு மருமகன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story