நாகை-விழுப்புரம் 4 வழிச்சாலை பணிகள்


நாகை-விழுப்புரம் 4 வழிச்சாலை பணிகள்
x

நாகை-விழுப்புரம் 4 வழிச்சாலை பணிகள்

நாகப்பட்டினம்

ஆமை வேகத்தில் நடந்து வரும் நாகை- விழுப்புரம் 4 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை- விழுப்புரம் நான்கு வழி சாலை

தமிழகத்தில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சரியான நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அதிக அளவில் சாலை விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே பெருகி வரும் வாகனத்திற்கு ஏற்ப சாலைகளை அகலப்படுத்தவும், புதிய சாலைகள் அமைக்கவும் அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் நாகை- விழுப்புரம் இடையே ரூ.6,341 கோடி மதிப்பில் 4 வழி சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

190 கி.மீ. தொலைவுள்ள இந்த சாலை 134 கிராமங்களை கடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 180 கி.மீ. சிமெண்டு சாலையாக அமைக்கப்பட்டு வருகிறது.

11 ரெயில்வே மேம்பாலம்

இந்த சாலை நாகை- சட்டநாதபுரம், சட்டநாதபுரம் - பூண்டியாங்குப்பம், பூண்டியாங்குப்பம் -புதுச்சேரி, புதுச்சேரி - விழுப்புரம் என 4 பகுதிகளாக பிரித்து டெண்டர் விடப்பட்டு 4 வழி சாலை அமைக்கும் பணிகளாக நடந்து வருகிறது.

இந்த சாலையானது நாகையில் இருந்து காரைக்கால், சிதம்பரம், அன்னவல்லி, ராமாபுரம், தோட்டப்பட்டு, தென்னல், கொங்கராம்பாளையம், வளவனூர் வழியாக விழுப்புரத்தை சென்றடைகிறது.

காரைக்கால், திருக்கடையூர், புவனகிரி, கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் புறவழி சாலையாக போடப்பட்டு வருகிறது. இதில் சிறு மற்றும் பெரியது என 50-க்கும் மேற்பட்ட பாலங்களும், 11 ரெயில்வே மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகிறது. பெரும்பாலான பாலங்கள் முழுமையாக கட்டி முடிக்காமலேயே உள்ளது.

ஆமை வேகத்தில்...

நாகை புத்தூர் ரவுண்டானா அருகே நாகை-தஞ்சாவூர்- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் விதமாக ட்ரம்பெட் வடிவிலான பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நடப்பாண்டு கடந்த மாதம் 5-ந் தேதிக்குள் 4 வழி சாலை அமைக்கும் பணிகளை 100 சதவீதம் முடித்திருக்க வேண்டும். ஆனால்

நிலம் கையகப்படுத்துவது, மண்எடுப்பது உள்ளிட்டவை காரணமாக குறித்த நேரத்தில் பணிகள் முடியவில்லை. 30 சதவீதம் வரை கூட இந்த பணிகள் முடிவடையாத நிலையில் உள்ளது. ஆமை வேகத்தில் நடந்து வரும் நாகை- விழுப்புரம் 4 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓராண்டு நீட்டிப்பு

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:-

நாகை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்ற வருகிறது. கடந்த மாதம் அக்டோபர் வரை புதுச்சேரி - விழுப்புரம் இடையிலான 29 கிலோமீட்டர் தூரத்தில் 35 சதவீதத்திலும் பூண்டியாங்குப்பம் - புதுச்சேரி இடையிலான 38 கிலோமீட்டர் தூரத்தில் 30 சதவீதத்திலும், சட்டநாதபுரம் - பூண்டியாங்குப்பம் இடையிலான 56.8 கிலோமீட்டர் தூரத்தில் 23.77 சதவீதத்திலும், நாகை - சட்டநாதபுரம் மொத்தம் 55.755 கிலோமீட்டர் தூரத்தில் 10 சதவீதத்திலும் மட்டுமே நிறைவடைந்துள்ளது. ஒப்பந்தத்தின்படி கடந்த 05.10.2022 அன்று 100 சதவீதம் பணிகள் நிறைவடைந்து இருக்க வேண்டும். நிலம் கையகப்படுத்தும் பணி, மண் எடுக்கும் பணி உள்ளிட்டவை பல்வேறு காரணங்களால் சாலை அமைக்கும் பணி தாமதம் ஆகிவிட்டது. தற்போது மேலும் ஒரு ஆண்டு காலம் ஒப்பந்ததாரருக்கு பணிகள் மேற்கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது என்றார்.

பயண நேரம் குறையும்

இதுகுறித்து நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் அரவிந்த் குமார் கூறுகையில், நாகை - விழுப்புரம் 4 வழி சாலை பணிகள் விரைவாக நிறைவடைந்தால் புதுச்சேரி, சென்னைக்கு மிகவும் விரைவாக செல்லலாம். தற்போது நாகையிலிருந்து சென்னை செல்ல 8 மணி நேரம் ஆகும். ஆனால் நாகை -விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் முடிவடையும் பட்சத்தில் 5 மணி நேரத்துக்குள் சென்னை செல்லலாம். போக்குவரத்து நெரிசல், பயண நேரம் குறையும். மேலும் விபத்துகளின் எண்ணிக்கையும் கட்டுக்குள் வரும். இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும் பட்சத்தில், நாகை - தூத்துக்குடி இடையே 4 வழி சாலை பணிகள் விரைவில் தொடங்க எதுவாக இருக்கும். வர்த்தகம் அபிவிருத்தி பெறும் என்றார்.


Related Tags :
Next Story