உதகையில் 124வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


உதகையில் 124வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 20 May 2022 4:56 AM GMT (Updated: 20 May 2022 5:02 AM GMT)

உதகையில் 124வது மலர் கண்காட்சியைமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நீலகிரி,

இந்தியாவில் உள்ள மலை வாசஸ்தலங்களில் நீலகிரி மாவட்டம் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் விதமாக ஆண்டு தோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆன்லைன் வாயிலாக கண்காட்சி நடந்தது. மக்கள் வீட்டில் இருந்தபடி தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வண்ண செடிகளை கண்டு ரசித்தனர். தற்போது தொற்று முழுவதும் குறைந்து சுற்றுலா பயணிகள் வருகையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சி 20-ந்தேதி இன்று முதல் வருகிற 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

இந்த கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 10 மணிக்கு தொடங்கி வைத்தார். அதன் பின்னர் மலர் மாடங்களை பார்வையிட்டார்.

தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து மலர் கண்காட்சியில் 1000 ரோஜாக்களை கொண்டு மஞ்சப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மலர்க்கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story