பனிமய மாதா திருவிழா: தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை


பனிமய மாதா திருவிழா: தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை
x

பனிமய மாதா திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கன மக்கள் கலந்து கொள்வது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி விழா நடந்தது. இந்த ஆண்டு கோவிலில் அனைத்து நிகழ்ச்சிகளும் வழக்கம் போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 440வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த திருவிழாவையொட்டி 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 4-ந் தேதி 10-ம் திருவிழா அன்று இரவு 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலியும், 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையிலும், 10 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையிலும் சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது.

இந்த நிலையில், பனிமய மாதா திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியை அறிவித்துள்ளார்.


Next Story