எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்


எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்
x

சென்னை கொளத்தூரில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மற்றொரு அணியாகவும் பிரிந்து வார்த்தை போர் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வருகிற 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூடி ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சென்னை கொளத்தூர் தொகுதி பெரவள்ளூர் அகரம் சந்திப்பில் நேற்று காலை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அ.தி.மு.க. வட சென்னை இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் உள்பட 200 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது, கட்சியை அபகரிக்க நினைப்பதாக கூறி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், இதை கண்டித்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஆர்ப்பாட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் உதவி கமிஷனர்கள் பால் அகஸ்டின் சுதாகர், செம்பேடு பாபு மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story