வாடகை செலுத்தாத ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்


வாடகை செலுத்தாத ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:46 PM GMT)

தர்மபுரியில் முருகன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகை செலுத்தாத ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டது.

தர்மபுரி

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலுக்கு பைபாஸ் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள இடங்களில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. பைபாஸ் ரோட்டில் இருந்த ஒரு கடைக்கு பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் நிலுவையில் இருந்தது. மேலும் அந்த கடையை சட்ட விரோதமாக உள்வாடகைக்கு வேறு நபர்களுக்கு விட்டு இருப்பதும் இந்து சமய அறநிலையத்துறைக்கு தெரிய வந்தது. இதையடுத்து சேலம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்க்கரசி உத்தரவின்பேரில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு உள் வாடகைக்கு விடப்பட்ட கடைகளை அகற்றி கொள்ளுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் கடைகளை காலி செய்யாமல் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை தர்மபுரி உதவி ஆணையர் உதயகுமார் தலைமையில் செயல் அலுவலர்கள் ராதாமணி, ஜீவானந்தம், சின்னசாமி, ஆய்வாளர்கள் சங்கர் கணேஷ், தனுசூர்யா மற்றும் போலீசார் தர்மபுரி பைபாஸ் ரோட்டில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள வாடகை செலுத்தாத ஆக்கிரமிப்பு கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.


Next Story