சுயதொழில் தொடங்க தேர்வான 170 பேருக்கு ஆணை


சுயதொழில் தொடங்க தேர்வான 170 பேருக்கு ஆணை
x

தாட்கோ மூலம் சுயதொழில் தொடங்க தேர்வான 170 பேருக்கு ஆணை வழங்கப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி கேட்டு இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடன் கேட்டு இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு அதில் 170 பேர், தங்கள் விருப்பப்படி சுயதொழில் தொடங்கிட அவர்கள் தேர்வு செய்த வங்கிகள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு அதற்குரிய ஆணையை மாவட்ட கலெக்டர் மோகன் வழங்கியதுடன், தேர்வு செய்யப்பட்ட அனைவரும் நல்லமுறையில் சுயதொழில் தொடங்கி பொருளாதார ரீதியாக முன்னேற்றம் பெறுவதுடன் மற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க உறுதுணையாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து தாட்கோ மூலம் 50 பேருக்கு தூய்மைப்பணியாளர்களுக்கான நலவாரிய அட்டையை வழங்கி இதன் மூலம் விபத்து காப்பீடு திட்டம், இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவி, முதியோர் ஓய்வூதியம், திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை ஆகிய திட்டங்களின்கீழ் பெற்று பயனடையுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வின்போது மாவட்ட தாட்கோ மேலாளர் குப்புசாமி, முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன், உதவி மகளிர் திட்ட அலுவலர் முனியப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story