பார்சல் லாரி மோதி பெண் உள்பட 2 பேர் பலி


பார்சல் லாரி மோதி பெண் உள்பட 2 பேர் பலி
x

வேட்டவலத்தில் பார்சல் லாரி மோதி பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

திருவண்ணாமலை

வேட்டவலம்

வேட்டவலத்தில் பார்சல் லாரி மோதி பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மஞ்சள் நீராட்டு விழா

வேட்டவலம் பாரதிதாசன் தெருவை சேர்ந்த வீரன் என்பவர் மகளின் மஞ்சள் நீராட்டு விழா நேற்று மாலை வேட்டவலத்தில் விழுப்புரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் அவரது உறவினர்களான விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா வி.புதூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (வயது 50) என்பவரும் வேட்டவலம் பாரதி தெருவை சேர்ந்த கர்ணன் என்பவரின் மனைவி கலா (42) உள்பட உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இரவு 9.30 மணி அளவில் நிகழ்ச்சி முடிந்ததும், கலா உறவினரான பெருமாளிடம் தன்னுடன் வீட்டுக்கு வந்து வீட்டில் உள்ளவர்களை பார்த்து விட்டு செல்லுமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து இருவரும் மண்டபத்தில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்றனர்.

லாரி மோதி 2 பேர் பலி

அப்போது திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற பார்சல் சர்வீஸ் லாரி இவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பெருமாள், கலா இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் இருவரையும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பெருமாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் கலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு 11 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து வேட்டவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் பார்சல் லாரியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்.


Next Story