கூவத்தூர் அருகே சட்ட விரோத மது விற்பனையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


கூவத்தூர் அருகே சட்ட விரோத மது விற்பனையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x

கூவத்தூர் அருகே சட்ட விரோத மது விற்பனை நடப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த நெடுமரம் கிராமத்தில் பெண் ஒருவர், 10 ஆண்டுகளாக அந்த பகுதியில் தொடர்ந்து அரசு மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கிராமத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் மது பிரியர்கள் இங்கு வந்து மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனர். ஒரு சிலர் அங்கேயே குடித்துவிட்டு அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு தொடர்ந்து தொந்தரவு ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை கூவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் சரியான நடவடிக்கை இல்லை என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் நெடுமரம் கிராம மக்கள் நேற்று கூவத்தூர் மதுராந்தகம் செல்லும் முக்கிய சாலையில் அரசு பஸ் ஒன்றை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கூவத்தூர் போலீசார் சம்மந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story