தூத்துக்குடியில்அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி


தூத்துக்குடியில்அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில்அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி தொடங்கியது.

தூத்துக்குடி

மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த 5 நாட்கள் புகைப்பட கண்காட்சி மற்றும் டிஜிட்டல் கண்காட்சி தொடக்க விழா தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் நேற்று நடந்தது.

விழாவுக்கு மத்திய மக்கள் தொடர்பகம் கூடுதல் தலைமை இயக்குனர் மா.அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மத்திய மக்கள் தொடர்பக கள விளம்பர அலுவலர் தேவி பத்மநாபன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார்.

நிறைய புத்தகங்களை படிக்க வேண்டும்

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்திலேயே அதிக அளவு சுதந்திர போராட்ட வீரர்கள் நிறைந்த மாவட்டங்கள் புதுக்கோட்டை, ஈரோடு மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்தான். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், சுதந்திர போராட்டத்துக்காக தனது சொத்துக்களை இழந்தார். ஆங்கிலேயரை எதிர்த்து துணிவுடன் கப்பல் இயக்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 408 சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்து உள்ளனர். அவர்களில் நிறைய பேரின் புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் இங்கே இடம்பெற்றிருக்கிறது.

போட்டி நிறைந்த உலகத்தில் மாணவ, மாணவிகள் அதிகமாக கற்று அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். பாடப்புத்தகங்களை மட்டுமல்லாமல் நிறைய புத்தகங்களை படிக்க வேண்டும்.

அறிவாற்றல் மிக்க சமுதாயமாக...

மாணவப்பருவத்தில் நன்றாக படித்தால் நீங்கள் போட்டித்தேர்வுகளுக்கு தனியாக படிக்க வேண்டியதில்லை. மாணவ பருவத்தில் எந்தவித கவலையும் கிடையாது. ஆகையால் நன்றாக படிக்க வேண்டும். இன்னும் பல சோதனைகளை தாண்டி சாதனைகளை படைக்க வேண்டும்.

நீங்கள் பாடங்களை புரிந்து படித்தால் சிறப்பாக இருக்கும். சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் தெரிவித்து அவர்களும் அறிந்து கொள்ள செய்ய வேண்டும். பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கும் நாளைய தலைவர்கள் நீங்கள்தான். நீங்கள் நன்றாக கற்று அறிவாற்றல் மிக்க சமுதாயமாக மாற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், வ.உ.சி. கல்லூரி முதல்வர் சி.வீரபாகு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரசுவதி, முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், மாவட்ட சமூகநல அலுவலர் ரதிதேவி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் (காசநோய்) சுந்தரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மத்திய மக்கள் தொடர்பக களவிளம்பர அலுவலர் கோபகுமார் நன்றி கூறினார்.


Next Story