திருச்சி கோட்டத்தில் 15 ரெயில் நிலையங்களை நவீனப்படுத்த திட்டம்


திருச்சி கோட்டத்தில்  15 ரெயில் நிலையங்களை நவீனப்படுத்த திட்டம்
x

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் 15 ரெயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட உள்ளது.

திருச்சி

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் 15 ரெயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட உள்ளது.

சிறிய ரெயில் நிலையங்கள் தேர்வு

மத்திய ரெயில்வே அமைச்சகம் அம்ரித் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ஆயிரம் சிறிய ரெயில் நிலையங்களை தேர்வு செய்து, அங்கு உள்கட்டமைப்பு மற்றும் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த முடிவு செய்தது. இந்த திட்டம் நீண்டகால நோக்குடன் தொடர்ச்சியான அடிப்படையில் ரெயில் நிலையங்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

அதன்அடிப்படையில் தமிழகத்தில் 60 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அவை மேம்படுத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தும், வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டும், பெருந்திட்டம் தயார் செய்யப்படும். குறைந்தபட்ச அத்தியாவசிய வசதிகளை கொண்டு ரெயில் நிலையங்களின் மேல்தளத்தில் அங்காடிகள், வணிக நிறுவனங்கள் அமைக்கப்படும்.

நவீனப்படுத்தப்படுகிறது

மேலும், ரெயில் நிலையத்தில் தகவல் பலகைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், பயணிகள் தங்கும் அறை, நடைமேடைகள், ஓய்வுஅறைகள், பாதசாரிகளுக்கான பிரத்யேக பாதைகள், நன்கு திட்டமிடப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள், மேம்படுத்தப்பட்ட விளக்குகள், இலவச வைபை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

இதற்காக திருச்சி ரெயில்வே கோட்டத்தில் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், காரைக்கால், மன்னார்குடி, திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, விருத்தாசலம், வேலூர் கண்டோன்மெண்ட், போளூர், லால்குடி ஆகிய 15 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த ரெயில் நிலையங்களை நவீனப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.


Next Story