தனியார் பள்ளி விடுதியில் மயங்கி விழுந்து பிளஸ்-1 மாணவர் சாவு


தனியார் பள்ளி விடுதியில் மயங்கி விழுந்து பிளஸ்-1 மாணவர் சாவு
x

கரூர் அருகே தனியார் பள்ளி விடுதியில் மயங்கி விழுந்து பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக இறந்தார்.

கரூர்

பிளஸ்-1 மாணவர்

கரூர் அருகே காக்காவாடி பிரிவு பகுதியில் ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கரூர், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பலர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இதில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் சந்தோஷ்பாபு (வயது 16) என்பவரும் விடுதியில் தங்கி பிளஸ்-1 கணினி அறிவியல் பாட பிரிவில் படித்து வந்தார்.இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சந்தோஷ்பாபு வழக்கம்போல் சாப்பிட செல்வதற்காக சக நண்பரிடம் தட்டை எடுத்து வரும்படி கூறியுள்ளார். அப்போது சந்தோஷ்பாபு திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைக்கண்ட சக மாணவர்கள் விடுதி காப்பாளரிடம் தகவல் தெரிவித்தனர்.

சாவு

இதையடுத்து உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் அந்த மாணவரை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவர் சந்தோஷ்பாபுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சந்தோஷ்பாபுவின் தந்தை சரவணன் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், எனது மகனின் சாவில் சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

போலீசார் விசாரணை

இந்த புகாரின்பேரில் அரவக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையில் சந்தோஷ்பாபுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மாணவர் எப்படி இறந்தார்? என பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். பள்ளி விடுதியில் மயங்கி விழுந்து மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story