கன்னியாகுமரி: காய்கறி கடையில் மது விற்ற வியாபாரி கைது


கன்னியாகுமரி: காய்கறி கடையில் மது விற்ற வியாபாரி கைது
x

கன்னியாகுமரி அருகே காய்கறி கடையில் மது விற்ற வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே உள்ள கைலாச விளை சாமியார் மடம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் (வயது 60). இவர் காட்டாத்துறை பேரூராட்சிக்குட்பட்ட சந்தையில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.

இவரது கடையில் முன்பக்கம் காய்கறிகள் குவித்து வைக்கப்பட்டு இருக்கும். இந்த நிலையில் கடையின் உள்புறம் மது பாட்டில்கள் வைத்து விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இங்கு காலையிலேயே பலரும் வந்து மது பாட்டில்கள் வாங்கு வதாக கூறப்படுகிறது.

மேலும் மது அருந்துபவர்கள், அந்தப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் வந்து அங்கு நிற்கும் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளிடம் அவதூறு பேசுவதாகவும் இதனால் அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்தன.

அதன்பேரில் திருவட்டாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா மற்றும் போலீசார் காய்கறி சந்தைக்குச் சென்று, ஜான்சன் கடையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மது பாட்டில்கள் விற்கப்படுவது தெரிய வந்தது.

அப்போது கடைக்குள் இருந்து சுமார் 50 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், காய்கறி கடைக்குள் வைத்து மது விற்றதாக ஜான்சனை கைது செய்தனர்.


Next Story