சென்னையில் 6 இடங்களில் இருந்து பொங்கல் சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்


சென்னையில் 6 இடங்களில் இருந்து பொங்கல் சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்
x

சென்னையில் 6 இடங்களில் இருந்து பொங்கல் சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக இன்று (வியாழக்கிழமை) 12-ந் தேதி முதல் 14-ந்தேதி வரை சென்னையில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதேபோல் 18-ந்தேதி மற்றும் 19-ந் தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையிலிருந்து தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 3 நாட்களுக்கு கூடுதலாக 4,449 சிறப்பு பேருந்துகளும், மற்ற முக்கிய நகரங்களில் இருந்து 6,183 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இன்று முதல் 14ம் தேதிவரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10,632 பேருந்துகள் என மொத்தம் 16,932 பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகிறது. இன்று வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் சென்னையிலிருந்து 651 பேருந்துகளும் பிற முக்கிய நகரங்களில் இருந்து 1,508 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் மெப்ஸ் அண்ணா பஸ் நிலையம், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிலையம், பூந்தமல்லி ஆகிய 6 இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

6 இடங்களுக்கு பொதுமக்கள் சிரமமின்றி செல்ல ஏதுவாக நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் இன்று முதல் 340 இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம்- பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர்- செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் குறித்த புகார்கள் தெரிவிக்க 1800 425 6151, 044- 2474 9002, 044-2628 0445, 044-2628 1611 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு உதவ 20 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் முழுமையாக நிரம்பினால் கூட கூடுதலாக பேருந்துகள் இயக்கவும் தயாராக உள்ளதாக போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story