சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

அரியலூர்

தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்தியம்பெருமானுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரதட்சணம் நடைபெற்றது.

இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில், மதனத்தூர் ராமலிங்கேஸ்வரர் கோவில், அருள்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள், நந்திபெருமானுக்கு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மேலும் அரியலூர் கைலாசநாதர் கோவிலில் சிவலிங்கம், நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குறிஞ்சேரி கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், ரெயில்வே கேட் அருகே உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் செட்டி ஏரிக்கரையில் உள்ள சக்தி விநாயகர் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. வி.கைகாட்டி அருகே பனங்கூரில் உள்ள பூங்கோதையம்மன் சமேத காளஹஸ்தி அப்பர் கோவிலில் நந்திபெருமானுக்கு 16 வகையான அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


Next Story