பா.ஜனதா நிர்வாகிகளை கைது செய்யக்கோரி திண்டுக்கல், ஆயக்குடியில் ஆர்ப்பாட்டம்


பா.ஜனதா நிர்வாகிகளை கைது செய்யக்கோரி திண்டுக்கல், ஆயக்குடியில் ஆர்ப்பாட்டம்
x

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜனதா நிர்வாகிகளை கைது செய்யக்கோரி திண்டுக்கல், ஆயக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜனதா நிர்வாகிகளை கைது செய்யக்கோரி திண்டுக்கல், ஆயக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

நபிகள் நாயகம் குறித்து பா.ஜனதா நிர்வாகிகள் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் பா.ஜனதா நிர்வாகிகளை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் திண்டுக்கல் திப்புசுல்தான் மணிமண்டபம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் அல்தாப் உசேன் தலைமை தாங்கினார்.

இதில் அஜ்ரத்துகள் பீர்முகம்மது, அப்துல்ரகுமான், ஹாரூன் முகமது, மாவட்ட செயலாளர் தவுபிக் உசேன், துணை செயலாளர் அம்ஜா, கவுன்சிலர் முகமது இலியாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜனதா நிர்வாகிகளை கண்டித்தும், அவர்கள் 2 பேரையும் கைது செய்யக்கோரியும் வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஆயக்குடி

இதேபோல் த.மு.மு.க. சார்பில் பேகம்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் சேக்பரீத் தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் முஸ்தபா, பாதிரியார் பிலிப் சுதாகர், ஜமாத்துல் உலமா சபை மாவட்ட பொருளாளர் நவுசாத்அலி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பழனியை அடுத்த ஆயக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பேரூர் தலைவர் ரியாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கைசர்அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாசித், பேரூர் செயலாளர் அனிபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் அப்துல்ரகுமான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதில், எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டு, பா.ஜனதா நிர்வாகிகளை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.


Next Story