குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர்

ஆண்டிமடம்:

சாலை மறியல்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை பகுதியில் தெற்குத்தெரு, மேலத்தெரு, தோப்பு தெரு, ஜெயலலிதா நகர் உள்ளிட்ட 4 தெருக்களுக்கும் விளந்தை ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள ஆழ்குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்மோட்டார் பழுதானதால் முறையாக குடிநீர் வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதுபற்றி அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் சாலையில் ஆண்டிமடத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அருகில் உள்ள ஒன்றிய அலுவலகத்தையும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணசாமி (கிராம ஊராட்சி) உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆழ்குழாய் கிணற்றில் அடிக்கடி மின் மோட்டார் பழுது ஏற்பட காரணம் என்ன? என்று ஆய்வு செய்தபோது அந்த ஆழ்குழாய் கிணறு பயனற்று போனதாக தெரியவந்தது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் புதிதாக ஆழ்குழாய் அமைக்கப்பட்டு, தடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தற்போது தற்காலிகமாக குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தனர்.


Next Story