விழிப்புணர்வு ஊர்வலம்
காரைக்குடியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
காரைக்குடி,
காரைக்குடியில் மத்திய அரசின் மத்திய மின் வேதியியல் மையம் (சிக்ரி) இயங்கி வருகிறது. இதன் 75-வது நிறுவன நாளையொட்டி காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் இருந்து பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிக்ரி இயக்குனர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். விஞ்ஞானி சத்திய மூர்த்தி முன்னிலை வகித்தார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மற்றும் காரைக்குடி நகர் மன்ற தலைவர் முத்துத்துரை ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கண்ணதாசன் மணிமண்டபத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் புதிய நீதிமன்றம், கல்லூரி சாலை, அழகப்பா பல்கலைக்கழக சாலை வழியாக சிக்ரியில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் காரைக்குடி தாசில்தார் மாணிக்க வாசகம், தி.மு.க. முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேஷ், சிக்ரி விஞ்ஞானிகள், அலுவலர்கள், எஸ்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி, ராமநாதன் செட்டியார் பள்ளி உள்பட 11 பள்ளிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.