ராமர் கோவில் கும்பாபிஷேகம் - முன்னின்று நடத்தி வைத்த எடப்பாடி பழனிச்சாமி


ராமர் கோவில் கும்பாபிஷேகம் - முன்னின்று நடத்தி வைத்த எடப்பாடி பழனிச்சாமி
x

எச்.கோபிநாதம்பட்டியில் நடந்த ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்னின்று நடத்தி வைத்தார்.

தர்மபுரி


தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே எச். கோபிநாதம்பட்டி கிராமத்தில் ராமர் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. விழாவில் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தி வைத்தார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.அன்பழகன், ஏ. கோவிந்தசாமி, வே.சம்பத்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ். ஆர்.வெற்றிவேல், அ.தி.மு.க. விவசாய அணி மாநில தலைவர் டி.ஆர்.அன்பழகன், அ.தி.மு.க. மாநில அமைப்புச் செயலாளர் சிங்காரம், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவுக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு யானைகள், குதிரைகள் அணிவகுக்க மேளதாளங்கள் முழங்க சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் யாகசாலையில் இருந்து புனித நீர் மேளதாளங்கள் முழங்க கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது ஹெலிகாப்டர் மூலம் கோவில் வளாகத்தின் மீது மலர்கள் தூவப்பட்டது.

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி 50-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story