வெளிமாநில வாகனங்களில் திடீர் சோதனை


வெளிமாநில வாகனங்களில் திடீர் சோதனை
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 11 Jan 2023 6:46 PM GMT)

ஓவேலிக்கு செல்லும் வெளிமாநில வாகனங்களை போலீசார், வனத்துறையினர் திடீரென சோதனை செய்தனர். மேலும் வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது என அறிவுரை வழங்கினர்.

நீலகிரி

கூடலூர்,

ஓவேலிக்கு செல்லும் வெளிமாநில வாகனங்களை போலீசார், வனத்துறையினர் திடீரென சோதனை செய்தனர். மேலும் வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது என அறிவுரை வழங்கினர்.

திடீர் சோதனை

கேரளா, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று வருகின்றனர். இதில் கேரளா சுற்றுலா பயணிகள் பெரும்பாலானவர்கள் கூடலூர் அருகே உள்ள ஓவேலிக்கு வருகை தருகின்றனர். தொடர்ந்து போலீசார் மற்றும் வனத்துறை யினர் சோதனைச்சாவடியில் சோதனை செய்த பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.கடந்த காலங்களில் சுற்றுலா பயணிகள் போர்வையில் வேட்டை கும்பலை சேர்ந்த சிலர் ஓவேலிக்குள் செல்ல முயன்றதை போலீசார் மற்றும் வனத்துறையினரின் சோதனையில் தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் வாகனங்களில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கி தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் சந்தேகப்படும்படியான நபர்கள் செல்கிறார்களா என போலீசார், வனத்துறையினர் நேற்று மதியம் 2 மணிக்கு திடீர் சோதனை செய்தனர்.

வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது

ஒரு காரில் 2 பேர் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் போலீசார், வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது மஞ்சேரியில் இருந்து ஓவேலியில் உள்ள தனது தோட்டத்திற்கு செல்வதாக காரில் இருந்தவர்கள் கூறினர். இருப்பினும் சந்தேகம் அடைந்த போலீசார், வனத்துறையினர் காரை சோதனை செய்தனர். அதில் ஹெட் லைட் இருப்பதை கண்டுபிடித்தனர்.அதை பறிமுதல் செய்த வனத்துறையினர், இரவில் வனப்பகுதிக்குள் அத்துமீறி செல்லக்கூடாது. மேலும் கோடை காலம் தொடங்கி விட்டதால் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தினர். இதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story