சிவகங்கை மாவட்டத்தில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


சிவகங்கை மாவட்டத்தில்  கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:45 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறை தீர்க்கும் கூட்டம்

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய விசாயிகள் மிளகாய் பயிருக்கான ஊக்கத்தொகைவழங்க வேண்டும், காய்கறிகள் விதைகள் வழங்கக் கோருதல், ஆழ்துளை கிணறு அமைத்தல், கண்மாய் கழிவுநீர் மற்றும் செங்குத்து உறிஞ்சுக்குழி அகற்றுதல், கால்வாயை சீர்செய்தல், புதிய மேல்நிலை தொட்டி கட்டித்தர கோருதல், தார்சாலை அமைத்தல், மெட்டல் சாலை அமைத்தல், மயானச்சாலை அமைத்து தர வேண்டும்.

மாவட்டத்தில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். ஆடு,மாடு கொட்டகை அமைத்து தர வேண்டும், பழுதடைந்த மடைகளை சரி செய்தல், பாலம் அமைத்தல், அங்கன்வாடி மையம் அமைத்தல், குடிநீர் ஊருணி கால்வாய் சுத்தம் செய்தல், தடுப்பணை அமைத்தல், ஊரணியை மராமத்து செய்தல், மானியம் விலையில் ஜே.சி.பி. எந்திரம் வாங்க கடன் கோருதல் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர்.

தடுப்பணைகள்

கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து கலெக்டர் பேசியதாவது:-

சிவகங்கை மாவட்டத்திலுள்ள நீர்நிலையிலுள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாத்திடவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தினை பாதுகாத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவையான உரங்களை இருப்பு வைக்கவும், கண்மாய்களில் உள்ள மடைகள், தடுப்புச்சுவர்கள் பழுதடைந்து இருப்பின் விரைந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜூனு, வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), வேளாண்மைத்துறை இணை இயக்குனர் தனபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story