மாயமான வியாபாரி கிணற்றில் பிணமாக மீட்பு


மாயமான வியாபாரி கிணற்றில் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 23 Nov 2022 7:00 PM GMT (Updated: 23 Nov 2022 7:00 PM GMT)

கூடலூர் அருகே மாயமான வியாபாரி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.

தேனி

கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி 7-வது வார்டு ரேஷன் கடைதெருவை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 39). குக்கர் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி பரிமளா (37). இவர்களுக்கு அனுஷ்கா (15) என்ற மகளும், ராஜி பாய் (8) என்ற மகனும் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பரிமளா கோபித்து கொண்டு தனது குழந்தைகளுடன் கொடுவிலார்பட்டியில் உள்ள பெற்றோருக்கு வீட்டுக்கு சென்று வசித்து வருகிறார். அழகர்சாமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், பின்னர் திரும்பி வரவில்லை. பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசில் அழகர்சாமியின் தந்தை ராஜேந்திரன் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்தநிலையில் குள்ளப்பகவுண்டன்பட்டி பங்களாமேடு பகுதியில் உள்ள தனியார் கிணற்றில் அழகர்சாமி பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு சென்று அவருடைய உடலை மீட்டனர். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story