இ-சேவை மையங்களில் வருவாய் அதிகாரி திடீர் ஆய்வு


இ-சேவை மையங்களில் வருவாய் அதிகாரி திடீர் ஆய்வு
x

கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரால் இ-சேவை மையங்களில் வருவாய் அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டாா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் தாலுகா அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் இ- சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில் சாதிச்சான்று, வருமானச்சான்று உள்ளிட்ட வருவாய்த்துறையினரால் வழங்கப்படும் சான்றிதழ்கள் பெற விண்ணப்பிக்கவும், மற்றும் பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாகவும் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பொதுமக்களின் கூட்டத்தை பயன்படுத்தி இ-சேவை மைய ஊழியர்கள், பொதுமக்களிடையே கூடுதல் பணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக வாட்ஸ்-அப் போன்ற சமூகவலைதளங்களிலும் புகார்கள் வந்தன.

இந்த புகாரின் அடிப்படையில் நேற்று தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜசேகரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அம்மையத்தில் வரிசையில் காத்திருந்த பொதுமக்களிடம் விண்ணப்ப கட்டணம் எவ்வளவு பெறப்படுகிறது. நீண்ட நேரம் காக்க வைக்கப்படுகிறீர்களா என்ற விவரத்தை கேட்டறிந்தார். மேலும் அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம், சான்றிதழுக்கான விண்ணப்பிக்க வரும் பொதுமக்களை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் விரைந்து விண்ணப்பித்து அனுப்ப வேண்டும், பொதுமக்களிடம் பணிவோடு நடந்துகொள்ள வேண்டுமென மாவட்ட வருவாய் அதிகாரி ராஜசேகரன் அறிவுறுத்தியதோடு பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.


Next Story