சேதமடைந்த பாலம் இடிந்தால் உயிர்பலி ஏற்படும் அபாயம்


சேதமடைந்த பாலம் இடிந்தால் உயிர்பலி ஏற்படும் அபாயம்
x

சேதமடைந்த பாலம் இடிந்தால் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.

அரியலூர்

தா.பழூர்:

வாய்க்கால் மீது கட்டப்பட்ட பாலம்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் ஊராட்சியில் வக்கரமாரி காலனி உள்ளது. இப்பகுதியில் சுமார் 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதேபோல் அந்த பகுதிக்கு அருகில் கோடாலிகருப்பூர் காலனி விரிவுபடுத்தப்பட்ட பகுதியில் சுமார் 130 குடும்பத்தினர் உள்ளனர். இந்த பகுதியில் அணைக்குடம் - அணைக்கரை சாலையில் இருந்து வக்கரமாரி காலனி பகுதிக்கு செல்வதற்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலையின் குறுக்கே பொன்னார் பிரதான வாய்க்காலில் இருந்து பிரிந்து வரும் 4-ம் என் பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலை கடந்து குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வகையில் 4-ம் எண் வாய்க்காலின் மீது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறு பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் கருங்கற்களால் கட்டப்பட்டு, பாலத்தின் மேல்பகுதி காங்கிரீட் தளமாக கட்டப்பட்டுள்ளது.

இடிந்து விழும் அபாயம்

4-ம் எண் பாசன வாய்க்கால் சோழமாதேவி, கோடாலிகருப்பூர், உதயநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் வயல்களுக்கு பாசனம் தண்ணீர் வரக்கூடிய பொதுப்பணித்துறை வாய்க்கால் ஆகும். இந்த வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம், அந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் சிறிது, சிறிதாக அரிப்பு ஏற்பட்டு கருங்கற்களாலான பக்கவாட்டு சுவர் உள்பக்கமாக சரிந்து விழுந்துள்ளது. இதனால் பாலத்தின் கான்கிரீட் பகுதி இணைப்புச் சாலையின் மேற்பரப்பில் இணைந்தவாறு உள்ளது.

பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படும்போதும், மழைக் காலங்களிலும் மண் அரிப்பு ஏற்பட்டு அந்த பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அந்த பாலத்தின் மீது இருசக்கர வாகனம் போன்றவற்றில் சென்றுவரும்போது மிகுந்த அச்சப்படும் நிலை உள்ளது. மழைக்காலங்களில் வாகனங்களில் பயணிக்கும்போது வாகன ஓட்டிகள் பாலம் வரை வாகனத்தை ஓட்டி வந்து, பின்னர் வாகனத்தில் இருந்து இறங்கி அதனை தள்ளிக்கொண்டு பாலத்தை கடந்து சென்று, மீண்டும் வாகனங்களில் பயணிக்கும் நிலை உள்ளது.

புதிய பாலம் கட்ட கோரிக்கை

மேலும் பழைய பொன்னார் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து உற்பத்தியாகும் பொருட்களை எடுத்துச் செல்லவும், விவசாயம் செய்ய நிலங்களுக்கு செல்வதற்கான பாதையாகவும் இந்த பாலம் பயன்படுகிறது. அபாயகரமான இந்த பாலத்தின் மீது வாகனங்கள் செல்லும்போது, அந்த பாலம் இடிந்து விழுந்தால் உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே தற்போது உள்ள பாலத்தை இடித்து அகற்றிவிட்டு தரமான புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் இந்த பாலம் இடிந்து விட்டால் அணைக்குடம் - அணைக்கரை பிரதான சாலையில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே தொடர்புடைய அதிகாரிகள் பாலம் இடிந்து எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன் பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்டி தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story