ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.4 லட்சம் வசூல்


ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.4 லட்சம் வசூல்
x

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.4¾ லட்சம் வசூலாகி உள்ளது.

கன்னியாகுமரி

திருவட்டார்,

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.4¾ லட்சம் வசூலாகி உள்ளது.

ஆதிகேசவ பெருமாள் கோவில்

108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றானதும், நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பட்ட திருத்தலமுமான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் 400 ஆண்டுகளுக்குப்பின்னர் அடுத்த மாதம் (ஜூலை) 6-ந்தேதி நடைபெற உள்ளது.

இதையொட்டி மூலவர் சிலை புதுப்பிக்கும் பணி, மீயூரல் ஓவியங்கள் சீரமைக்கும் பணி, மடப்பள்ளி சீரமைப்பு, பிரகாரங்களில் வர்ணம் பூசும்பணி, கோவில் கருவறையின் மேல்பகுதி விமானம் சுத்தப்படுத்தி, அதன் மீது அஷ்டபந்தன காவி பூசும் பணி நேற்று தொடங்கி நடந்து வருகிறது. கோவில் பிரகாரத்தில் மின் விளக்குகள் பணி முடிவடைந்து விட்டது.

பந்தல் அமைக்கும் பணி

கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலின் கிழக்கு வாசலையொட்டிய பகுதியில் பந்தல் அமைப்பதற்காக பிரமாண்ட தூண்கள் நிறுவும் பணி தொடங்கியது. இதையொட்டி அங்கு இருந்த பழமையான கட்டிடம் இடித்து மாற்றப்பட்டது.

வருகிற 29-ந்தேதி முதல் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்குகிறது. 30-ந்தேதி பாலாலயத்தில் பூஜையில் இருக்கும் அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் கருவறைக்கு ஏழு ஆண்டுகளுக்குப்பின்னர் எடுத்துச்செல்லப்பட்டு அங்கு பூஜைகள் நடைபெறும். அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி வரை பல்வேறு பூஜைகள் நடைபெறும்.

கும்பாபிஷேகம்

6-ந்தேதி அதிகாலை 5.10 மணி முதல் 5.50 மணி வரை ஜீவகலச அபிஷேகம், காலை 6 மணி முதல் 6.50 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெறும். மேலும் குலசேகரப்பெருமாள் கோவில், திருவம்பாடி கிருஷ்ணசாமி சன்னதி, தர்மசாஸ்தா சன்னதியிலும் கும்பாபிஷேகம் நடைபெறும்.

ஜூலை 9-ந்தேதி தங்கக்கொடிமர பிரதிஷ்டை நடக்கிறது.

ரூ.4¾ லட்சம் வசூல்

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு 5 இடங்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியலும், 6 குடங்களும் நேற்று காலை திறந்து எண்ணப்பட்டன. அறநிலையத்துறை சூப்பிரண்டு ஆனந்த், கோவில் மேலாளர் மோகன் குமார் முன்னிலையில் பக்தர்கள் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் மூலம் ரூ.4 லட்சத்து 93 ஆயிரத்து 992 வசூலாகி இருந்தது.


Next Story