ஆடு, மாடுகள் விற்பனை அமோகம்


தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 12 Jan 2023 6:45 PM GMT)

பாவூர்சத்திரம் தினசரி சந்தையில் ஆடு, மாடுகள் விற்பனை அமோகமாக இருந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் தினசரி சந்தையில் ஆடு, மாடுகள் விற்பனை அமோகமாக இருந்தது.

பொங்கல் திருநாள்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பொங்கலுக்கு மறுநாள் கரிநாளாக கடைபிடிப்பார்கள். அன்றைய தினம் அசைவ பிரியர்கள் ஆடு, கோழி இறைச்சியை எடுத்து உணவு தயார் செய்வதில் ஆர்வம் காட்டுவர். இதனால் இறைச்சி கடைக்காரர்கள் தங்களுக்கு தேவையான ஆடுகளை இப்போதே வாங்கி வருகின்றனர்.

மேலும் சிலர் பொங்கலுக்கு மறுநாள் கிடா வெட்டி குடும்பத்தினருடன் கறி சமைப்பார்கள். இதனால் அவர்களும் ஆடு வாங்கி வருகின்றார்கள்.

விற்பனை அமோகம்

இந்த நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள அரசு தினசரி சந்தை வழக்கம் போல் நேற்று கூடியது.

இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள், மற்றும் வியாபாரிகள் நிறைய பேர் ஏராளமான ஆடுகள், மற்றும் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அவற்றை இறைச்சி கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டி வாங்கி சென்றனர். இதனால் சந்தையில் கூட்டம் அலைமோதியது.

ஆடுகளின் தரத்தை பொறுத்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் மாடு தரத்தை பொறுத்து ரூ.15 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் நாட்டு கோழிகளும் அதிக அளவில் விற்பனையானது.



Next Story