அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று சேலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

சேலம்

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று சேலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

ஆடி மாதம் முதல் வெள்ளி

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்கு பக்தர்கள் அதிகம் பேர் வருவார்கள். பெண்கள் விரதம் இருந்து கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

அதன்படி கடந்த 17-ந்தேதி ஆடி மாதம் பிறந்தது. இதையடுத்து அன்று முதல் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வரப்படுகிறது. இந்த நிலையில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கோட்டை மாரியம்மன்

அதன்படி சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் பெற்றனர்.

எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது. அஸ்தம்பட்டி மாரியம்மனுக்கு பூ அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெரமனூர் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும்...

சேலம் தண்ணீர் பந்தல் காளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதே போன்று சேலம் அய்யந்திருமாளிகை மாரியம்மனுக்கு பாலதிரிபுரசுந்தரி அலங்காரம் செய்யப்பட்டது. குகை, செவ்வாய்பேட்டை, அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை உள்ளிட்ட மாநகரில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு சென்று அம்மன் தரிசனம் பெற்றனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடிமாதம் முதல்வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story