விநாயகர் சிலைகளை எங்கு கரைக்கலாம்


விநாயகர் சிலைகளை எங்கு கரைக்கலாம்
x

விநாயகர் சிலைகளை எங்கு கரைக்கலாம் என்று கலெக்டர் அனிஷ் சேகர் அறிவித்துள்ளார்.

மதுரை


விநாயகர் சிலைகளை எங்கு கரைக்கலாம் என்று கலெக்டர் அனிஷ் சேகர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

களிமண்

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. கடல், ஆறு மற்றும் குளம் போன்ற நீர் நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அது குறித்து விரிவான விவரங்கள் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது.

அதன்படி களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன் படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப் படலாம்.

நீர் நிலைகள்

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது.

மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை வைகை, கீழ் தோப்பு, ஒத்தக்கடைகுளம், வாடிப்பட்டி, குமாரம் கண்மாய், மேலக்கால், அய்யனார் கோவில் ஊருணி, குண்டாறு, மறவன்குளம் கண்மாய், மொட்டைக்குளம், சாப்டூர் கண்மாய், தேவன்குறிச்சி கண்மாய், மண்கட்டி தெப்பக்குளம், வைகை தைக்கால் பாலம், திருப்பரங்குன்றம் செவந்திக்குளம் கண்மாய், அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி கண்மாய், திருமங்கலம் சிவரக்கோட்டை கமண்டலநதி, மேலூர் கொட்டாம்பட்டி சிவன் கோவில் தெப்பம் ஆகிய இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்.

விவரம்

விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு பொதுமக்கள் கொண்டாட வேண்டும். இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story