மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: குற்றாலம் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை:  குற்றாலம் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு  சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் ஐந்தருவியில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது

தென்காசி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் ஐந்தருவியில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் சீசன்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும். சாரல் மழை விட்டுவிட்டு பெய்யும். இந்த சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வருவார்கள்.

கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் மழை இல்லாததால் அருவிகளில் மிகவும் குறைவாக தண்ணீர் விழுந்தது.

குளிக்க தடை

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தது. மேலும், நேற்று காலையில் இருந்தே குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து பெய்தது. இதன் காரணமாக அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

நேற்று மாலை ஐந்தருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது சிறு சிறு கற்கள், மர துண்டுகள் அருவியில் வந்து விழுந்தன. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் போலீசார், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர்.

குளிர்ச்சியான சூழல்

ஆனால், வழக்கம்போல் குற்றாலம் மெயின் அருவியில் இரவில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. பழைய குற்றாலத்தில் இரவில் குளிக்க அனுமதி இல்லை.

நேற்று குற்றாலத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து சாரல் மழை பெய்தால் குற்றாலத்தில் சீசன் களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story