ஓசூர் அருகே மனைவி பிரிந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை


ஓசூர் அருகே மனைவி பிரிந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

மத்திகிரி:

ஓசூர் அருகே மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் வட மாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வட மாநில தொழிலாளி

உத்தரபிரதேச மாநிலம் பிலிபர்ட் மாவட்டம் மசித் கிராமத்தை சேர்ந்தவர் உமாசங்கர் (வயது 28). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளியில் தங்கி, கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதை அவரது மனைவி திரவுபதி தேவி (23) கண்டித்தார்.

இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரம் அடைந்த திரவுபதி தேவி பெங்களூருவில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு சென்று விட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

மனைவி பிரிந்த துக்கத்தில் இருந்த உமாசங்கர், கடந்த 3-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் அவரது வீடு பூட்டிய நிலையில் இருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து மத்திகிரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, உமாசங்கர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக திரவுபதி தேவி கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story