தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கக்கோரி உண்ணாவிரதம்


தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கக்கோரி உண்ணாவிரதம்
x

இலங்கை சிறைபிடித்த தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கக்கோரி உண்ணாவிரத போராட்டம் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் நேற்று நடந்தது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

இலங்கை சிறைபிடித்த தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கக்கோரி உண்ணாவிரத போராட்டம் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் நேற்று நடந்தது.

உண்ணாவிரதம்

அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பில் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தம் எதிரே நேற்று காலை 9 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

ராமேசுவரம், பாம்பன், மண்டபம், நாகப்பட்டினம் காரைக்கால் உள்ளிட்ட தமிழக பகுதிகளில் இருந்து கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலும் மீன்பிடிக்கச் சென்று, எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையால் பிடிபட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்களின் பிரச்சினைகளை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் மாநிலங்களவை எம்.பி. பதவி ஒன்றை அனைத்து அரசியல் கட்சிகளும் மீனவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

அனைத்து விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட செயலாளர் சேசுராஜா தலைமை தாங்கினார்.

விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் தேவதாஸ், சகாயம், எமரிட், பாம்பன் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி பேட்ரிக், நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் எஸ்.பி.ராயப்பன் மற்றும் காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த திரளான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்க முடியாது

இதில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட செயலாளர் சேசுராஜா கூறியபோது:-

கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து தற்போது வரையிலும் தமிழகத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ளன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் நல்ல நிலையில் உள்ளன. ஒவ்வொரு படகும் ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரை மதிப்பு இருக்கும். மீனவர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கக்கூடியது மீன்பிடி படகுதான். சிறைபிடிக்கப்படும் மீனவர்கள் விடுதலை செய்யப்படும் நிலையில் மீனவர்களின் படகுகளை இலங்கை அரசுைடமையாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கைக்கு இந்தியா பல்வேறு நிதி உதவி அளித்து வருவதை வரவேற்கிறோம்.

முதல்-அமைச்சருக்கு நன்றி

அதேநேரத்தில் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய தமிழக மீனவர்களின் அனைத்து படகுகளையும் மீட்டு தமிழகம் கொண்டுவர மத்திய அரசு இலங்கை அரசோடு பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் 2016-ம் ஆண்டுக்கு முன்பு வரை இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ள தமிழக முதல்-அமைச்சருக்கு மீனவர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதே நேரத்தில் அந்த நிவாரண உதவித்தொகையில் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டு படகுகள் விடுபட்டுள்ளன. எனவே விடுபட்ட படகுகளையும் சேர்த்து அரசு நிவாரணம் அறிவிக்க வேண்டும்.

அதுபோல் மீனவர்கள் பிரச்சினை குறித்து அழுத்தம் தெரிவித்து பேசும் வகையில் மீனவர்களுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி ஒன்றை அனைத்து அரசியல் கட்சிகளும் சேர்ந்து ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நேற்று மாலை 5 மணி வரையிலும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.


Related Tags :
Next Story