காதல் திருமணம் செய்த 10 மாதங்களில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


காதல் திருமணம் செய்த 10 மாதங்களில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

காதல் திருமணம் செய்த 10 மாதங்களில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

சென்னை

பூந்தமல்லி:

குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம், அழகேசன் நகரைச் சேர்ந்தவர் விஜயவேல் (வயது 25). கட்டிடத்தொழிலாளி. இவர், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ரம்யா (22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் விஜயவேல் வேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்து இரவு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் உள்ளே தனது காதல் மனைவி ரம்யா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த குன்றத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி சகாயபரத் மற்றும் போலீசார், தூக்கில் தொங்கிய ரம்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ரம்யா, திருமணத்துக்கு பிறகு வேலைக்கு செல்வதாக தனது காதல் கணவரிடம் கூறினார். ஆனால் அதற்கு விஜயவேல் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதில் விரக்தி அடைந்த ரம்யா, தற்கொலை செய்துகொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக ரம்யாவின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் விஜயவேலிடம் குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். ரம்யாவுக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


Next Story