பற்கள் பிடுங்கிய விவகாரம்: சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது ஏன்? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்


பற்கள் பிடுங்கிய விவகாரம்: சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது ஏன்? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
x

கைதிகளின் பற்கள் பிடுங்கிய வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று உத்தரவிட்டார்.

சென்னை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துவரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக புகார் எழுந்தது. இதற்கு காரணமான அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவர் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் பாய்ந்தது. மேலும் கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தற்போது இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.

இந்நிலையில் இந்த வழக்கு பற்றி ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா தலைமையிலான உயர்மட்ட குழுவும் விசாரணை நடத்தி வருகிறது. அந்த குழு, இதுதொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சிபாரிசு செய்தன. அதை ஏற்று இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், அம்பாசமுத்திரம் காவல் நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கிய விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்து பேசியதாவது:-

"விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கிய விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் புகார்கள் வந்தவுடன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மார்ச் 26 அன்று முதல் கட்ட நடவடிக்கையாக பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதனை தொடர்ந்து விசாரணை அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

அமுதா ஐஏஎஸ் நடத்திய விசாரணைக்கு பிறகு கடந்த 17-ம் தேதி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் குழு 4 நாட்கள் விசாரணை நடத்தி இடைக்கால அறிக்கையை நேற்று அளித்தது. இடைக்கால அறிக்கை அடிப்படையில் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது." என்று தெரிவித்தார்.


Next Story