பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு


பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
x

கும்பகோணம் பகுதி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணம் பகுதி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசி விழா

வைணவ தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்துக்கு அடுத்த 3-வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு கோவிலின் உள் பிரகாரத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது.பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் இந்த கோவிலில் தனியாக சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் மற்றும் உற்சவர் சன்னதிகளில் கோமளவல்லி தாயார், ஆராவமுதன் பெருமாளை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.

ஜெகநாதபெருமாள் கோவில்

கும்பகோணம் அருகே உள்ள நந்திபுர விண்ணகரம் என்றழைக்கப்படும் நாதன்கோவில் ஜெகநாதபெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. அப்போது உற்சவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சேஷவாகனத்தில் சொர்க்கவாசல் எனப்படும் மூலவர் வாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து மூலவர் ஜெகநாதபெருமாள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் திருவடி சேவை நடைபெற்றது. செண்பகவல்லித் தாயார் வைகுண்ட அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதைப்போல கும்பகோணம் சக்கரபாணி கோவில், ராமசாமி கோவில், பெரிய கடைத்தெரு தசாவதார பெருமாள் கோவில், ராஜகோபால சாமி கோவில், மேலக்காவேரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருவிடைமருதூர்

கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறையில் சாரநாயகி சாரநாத பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் 12-வது தலமாக போற்றப்படும் இந்த கோவில் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக பரமபத வாசல் உள்ள சிறப்பு பெற்ற ஸ்தலம். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை சாரநாத பெருமாள் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் காட்சி அளித்தார். அப்போது வேத மந்திரங்கள் முழங்க ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் சாரநாத பெருமாள் பரமபத வாசல் வழியாக வந்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.பாபநாசம் சன்னதி தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story