மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றம் - 4-ந்தேதி தெப்ப உற்சவம்


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றம் - 4-ந்தேதி தெப்ப உற்சவம்
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. வருகிற 4-ந் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

மதுரை


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. வருகிற 4-ந் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

தெப்பத்திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, மார்கழி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்தாண்டு தை மாத தெப்பத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமி சன்னதி கொடிமரம் பகுதியில் திருவிழாவுக்கான யாகசாலை பூஜை நேற்று காலை 8.30 மணி அளவில் தொடங்கி நடந்தன. மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்கள். பின்னர் கொடிமரத்தில் காலை 10.45 மணிக்கு கும்ப லக்கனத்தில் காப்பு கட்டிய சுவாமிநாதன் பட்டர் திருவிழாவிற்கான கொடியை ஏற்றினார். கொடிமரத்திற்கும், சுவாமி-அம்மனுக்கும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.

சித்திரை வீதியில் சுவாமி உலா

விழா நாட்களில் காலை, இரவில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள். வருகிற 29-ந் தேதி சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், 30-ந் தேதி வலை வீசி அருளிய லீலையும் நடைபெறுகிறது. தெப்பத்திருவிழாவுக்கு முன்னோட்டமாக தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி வருகிற 1-ந் தேதி நடக்கிறது. அதை தொடர்ந்து 3-ந் தேதி சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழா நடைபெறும்.

தெப்ப உற்சவம்

விழாவில் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் காமராஜர் சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் வருகிற 4-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் அதிகாலையில் கோவிலில் இருந்து புறப்பாடாகி தெப்பக்குளத்தை சென்றடைவர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் காலையில் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. காலை 2 முறையும், இரவு ஒரு முறையும் சுவாமி தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள்.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன், துணை கமிஷனர் அருணாசலம் மற்றும் கோவில் ஊழியர்கள், பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.


Next Story