கனவுகளை நனவாக்க லட்சியத்தை எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும்


கனவுகளை நனவாக்க லட்சியத்தை எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும்
x

கனவுகளை நனவாக்க லட்சியத்தை எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகளிடம் தமிழக கவர்னர் கூறினார்.

நீலகிரி

ஊட்டி, ஜூன்.8-

கனவுகளை நனவாக்க லட்சியத்தை எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகளிடம் தமிழக கவர்னர் கூறினார்.

கவர்னர் ஆய்வு

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 5-ந் தேதி நீலகிரி மாவட்டம் ஊட்டி வந்தார். தொடர்ந்து ஊட்டி அருகே உள்ள பாலாடா ஏகலைவா மாதிரி மேல்நிலை பள்ளியை கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று பார்வையிட்டு, மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும் பள்ளி மற்றும் விடுதி வளாகத்தை பார்வையிட்ட கவர்னர், மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள், தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து விவாதித்தார். இதையடுத்து பழங்குடியினர் ஆராய்ச்சி மையம், அருங்காட்சியகம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

கனவுகளை நனவாக்க

பின்னர் மாணவ-மாணவிகளுடன் ஆர்வமுடன் கலந்துரையாடிய கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், 'பெரிய கனவுகளை காணுங்கள், கனவுகளை நனவாக்க லட்சியத்தை எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும். தொழில்நுட்பம் மற்றும் வசதிகளை சிறந்த முறையில் பயன்படுத்தி, வெளி உலகத்தில் ஏற்படும் முன்னேற்றங்களுடன் உங்களை புதுப்பித்து கொள்ள வேண்டும்' என்றார்.

அப்போது மாணவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு கவர்னர் ஆர்வமுடன் பதிலளித்தார். மற்றும் சிறந்த முடிவுகளுக்கு மேல் நேரத்தை சரியான முறையில் பயன்படுத்துவதற்கான நடைமுறை குறிப்புகளை வழங்கினார். மேலும் மாணவர்கள் தங்கள் கனவுகளை பகிர்ந்து கொண்டு, அவற்றை எவ்வாறு அடைவது என்பது குறித்து கவர்னரிடம் ஆலோசனை கேட்டனர். மாணவர்களின் முயற்சிகளில் சிறந்து விளங்கவும், அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் வெற்றி பெறவும் அவர் வாழ்த்தினார்.

வழிகாட்டுதல்

தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை சந்தித்து, மாணவர்களின் கல்வி மற்றும் சீர்ப்படுத்தலில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும். மாணவர்கள் சிறப்பான முறையில் தேர்ச்சி பெறுவதை ஆசிரியர்கள் பார்க்க வேண்டும். மதிப்பு அடிப்படையிலான கல்வியுடன் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சரியான நேரத்தில் வழிகாட்டுதல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்க வேண்டும் என்றார்.

ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ஆசிரியரை தனது வழிகாட்டியாக ஒதுக்குமாறு தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஸ் ராவத் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதையடுத்து, ஊட்டி ராஜ்பவனில், நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசினார். முன்னதாக கவர்னர் நிகழ்ச்சியையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


Next Story