10 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது; 3 பேர் படுகாயம்


10 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது; 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:45 PM GMT)

சுசீந்திரம் அருகே 10 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்,

சுசீந்திரம் அருகே 10 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கார் டயர் வெடித்தது

நாகர்கோவில் அருகே உள்ள கலைநகரை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது61). இவரும், இவரது மனைவி ஜெயந்தி (58), பேரன் இளந்துருவன் (6) ஆகிய 3 பேரும் நேற்று காலையில் வட்டக்கோட்டை அருகே உள்ள ஆமணக்கண்விளையில் உள்ள பால்ராஜின் மகள் வீட்டுக்கு காரில் சென்றனர். பின்னர் மதியம் 1.30 மணியளவில் அங்கிருந்து 3 பேரும் காரில் கலைநகர் நோக்கி புறப்பட்டனர். காரை பால்ராஜ் ஓட்டி வந்தார்.

சுசீந்திரம் பைபாஸ் சாலையில் கற்காடு சந்திப்பு பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென காரின் டயர் வெடித்தது. இதில் கார் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

3 பேர் படுகாயம்

காரில் பயணம் செய்த 3 பேரும் படுகாயம் அடைந்து அலறினர். அவர்களது சத்தம் கேட்டு அருகில் நின்றவர்கள் விரைந்து வந்து காரின் கண்ணாடியை உடைத்து 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

------------

(படம் உண்டு)


Next Story