பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு


பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 3 July 2023 7:33 PM GMT (Updated: 4 July 2023 6:40 AM GMT)

பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர்

வடக்குமாதவி,

பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள டால்பின் நகரை சேர்ந்தவர் சவுந்திரராஜன். இவர் வெங்கடேசபுரத்தில் காபி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சசிகலா (வயது 43). இவர் தனது காருக்கு பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் இயங்கிவரும் சுந்தரம் பைனான்ஸ் அலுவலகம் மூலம் காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு பெற்றிருந்தார். காப்பீடை புதுப்பித்து தருவதற்காக பிரீமியத்தொகையை காசோலையாக செலுத்தியிருந்தார். காப்பீட்டு பாலிசி 12.6.2018 அன்று வழங்கப்பட்டது.

இதற்கிடையே சசிகலா கொடுத்த காசோலை மிகவும் தாமதமாக வங்கியில் பணம் பெற காப்பீட்டு நிறுவனம் மூலம் அனுப்பப்பட்டிருந்தது. இந்தநிலையில் அந்த காசோலையில் தவறு இருப்பதாக தெரிவித்து காசோலையை 25.7.2018 அன்று நிதி நிறுவனத்தினர் திருப்பி கொடுத்து விட்டனர். மேலும் பாலிசியை ரத்தும் செய்துவிட்டனர்.

இந்நிலையில் சசிகலாவின் கார் விபத்துக்கு உள்ளாகி சேதம் ஏற்பட்டது. ஆனால் பாலிசியை ரத்து செய்ததால், விபத்துக்குரிய காப்பீட்டு தொகையை பெற முடியவில்லை. இதில் மனவேதனை அடைந்த சசிகலா, வக்கீல் பாண்டியன் மூலம் சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் பெரம்பலூர் மேலாளர், திருச்சியில் உள்ள ராயல் சுந்தரம் பொது காப்பீட்டு நிறுவனத்தின் மேலாளர், சென்னை பட்டுல்லாஸ் சாலையில் உள்ள பதிவு அலுவலகத்தின் மேலாளர், சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் காரப்பாக்கத்தில் உள்ள காப்பீட்டு நிறுவன கார்ப்பரேட் அலுவலகத்தின் மேலாளர் ஆகியோர் மீது பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தில் 19.2.2019 அன்று மனு செய்து, வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தின் தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் மனுதாரரின் மனுவை பகுதியாக அனுமதித்து, இருதரப்பிலும் விசாரணை நடத்தினர். இதில் காப்பீட்டு நிறுவனத்தின் சேவை குறைபாடு காரணமாக, புதுப்பிக்கப்பட்ட காப்பீட்டு ஆவணத்தை சசிகலாவுக்கு உடனே வழங்க வேண்டும். மேலும் மன உளைச்சலுக்கு ஆளான அவருக்கு நிவாரணத்தொகையாக ரூ.50 ஆயிரம், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். முதலாவது எதிர்மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.


Next Story