திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக நிழற்குடைகள் அமைக்கும் பணி தீவிரம்


திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக நிழற்குடைகள் அமைக்கும் பணி தீவிரம்
x

திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ரூ.9 லட்சத்தில் நிழற்குடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களில் இருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை பொதுவழி மற்றும் ரூ.100 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்று தரிசிக்கின்றனர். மலைக்கோவிலில் அதிகளவில் பக்தர்கள் குவியும் போது, போதிய அளவில் நிழற்குடை இல்லாததால் வெயில் மற்றும் மழையில் பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக முக்கிய விழாக்களின் போது பக்தர்கள் தேர்வீதியில் சுட்டெரிக்கும் வெயிலில் வரிசையில் காத்திருக்கும் போது சில பக்தர்கள் மயங்கி விழுகின்றனர்.

இதையடுத்து கோவில் நிர்வாகம் பக்தர்கள் வசதிக்காக தற்காலிக நிழற்குடைகள் அமைக்க தீர்மானித்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், பக்தர்கள் வெயில் மற்றும் மழையால் அவதிப்படுவதை தவிர்க்கும் வகையில், கோவில் நிதியில் இருந்து, ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் தற்காலிகமாக 25 நிழற்குடைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது நிழற்குடைகளுக்கு வண்ணம் பூசும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. ஒரிரு நாளில் மலைக்கோவில் நிழற்குடை அமைக்கப்படும் என தெரிவித்தார்.


Next Story