தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியர் கபடி வீரர்கள் தேர்வு


தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியர் கபடி வீரர்கள் தேர்வு
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:45 PM GMT)

தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியர் கபடி வீரர்கள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட சப்ஜூனியர் கபடி வீரர்கள் தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கபடி வீரர்கள்

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் வருகிற 3, 4-ந் தேதிகளில் சேலம் மாவட்டம் சங்ககிரியில் மாநில சப்ஜூனியர் சிறுவர், சிறுமியர் கபடி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் பங்கேற்பதற்கான தூத்துக்குடி மாவட்ட சிறுவர், சிறுமிகள் தேர்வு தூத்துக்குடி தருவை மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. காலை 10 மணிக்கு சப்ஜூனியர் சிறுமிகளுக்கும், மாலை 3 மணிக்கு சப்ஜூனியர் சிறுவர்களுக்கும் தேர்வு நடைபெறும். தேர்வில் சிறந்த வீரர்கள் 5 பேரும், வீராங்கனைகள் 5 பேரும் தேர்வு செய்யப்பட்டு மாநில தேர்வுக்கு அனுப்பப்படுவார்கள்.

தகுதிகள்

இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கு சிறுவர், சிறுமிகள் 55 கிலோவுக்குள் எடை இருக்க வேண்டும், 30.12.2006-க்கு பிறகு பிறந்து இருக்க வேண்டும். 16 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது சான்றுக்கு 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பிறந்த மாதம், வருடம் பதிந்த ஆதார் அட்டை ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் கொண்டு வர வேண்டும். தேர்வுக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்து உள்ளார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story