நடராஜர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா


நடராஜர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா
x

களக்காடு கோவிலில் வைகாசி திருவிழா: நடராஜர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் வைகாசி திருவிழா, கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நடைபெறவில்லை. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

8-ம் திருநாளான நேற்று காலையில் கும்பாபிஷேகம், மதியம் அன்னதானம் நடந்தது. தொடர்ந்து நடராஜர் பச்சை பட்டு உடுத்தி, பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கோவிலுக்கு வந்த நடராஜருக்கு தீபாராதனை நடைபெற்றது. இரவில் பிச்சாண்டவர் கோலத்தில் கங்காளநாதர் எழுந்தருளினார். பின்னர் சந்திரசேகர் சுவாமிகளும், சத்தியவாகீஸ்வரர் பூங்கோவில் வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்களான நாடார் சமுதாயத்தினர் செய்திருந்தனர். 9-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.


Next Story