மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர்


மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர்
x
தினத்தந்தி 4 Nov 2022 6:45 PM GMT (Updated: 4 Nov 2022 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

மணிமுக்தா அணை

கள்ளக்குறிச்சி அருகே அணைக்கரை கோட்டாலத்தில் உள்ள மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம்.கார்த்திகேயன், மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

போர்க்கால அடிப்படையில்...

பழைய பாசன வாய்க்காலில் முதல் 61 நாட்களுக்கு 25 கன அடி நீரும், புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு 85 கன அடி நீரும், பழைய பாசன ஆற்றில் முதல் 27 நாட்களுக்கு வினாடிக்கு 25 கன அடியும், புதிய பாசன ஆற்றில் வினாடிக்கு 85 கன அடியும், 27 நாட்களுக்கு பிறகு டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பழைய பாசன ஆற்றில் வினாடிக்கு 18 கன அடியும், புதிய பாசன ஆற்றில் வினாடிக்கு 61 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டு அப்பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன. போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டுள்ளது.

விவசாயத்துக்கு...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிப்புகள் அதிகம் ஏற்படாதவாறு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்பாடுகளும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழையால் கிடைக்கப்பெற்றுள்ள நீரை விவசாயிகள் சேகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, வேளாண் இணை இயக்குனர் வேல்விழி, பொதுப்பணித்துறை(நீர் வளம்) செயற்பொறியாளர் அருணகிரி, உதவி செயற்பொறியாளர் மோகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரி பெருமாள், ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், கோட்டாட்சியர் பவித்ரா, தி.மு.க. வடக்கு மாவட்ட துணை செயலாளர் வாணியந்தல் ஆறுமுகம், தெற்கு மாவட்ட அவை தலைவர் ராமமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.என்.டி.முருகன், ஒன்றிய செயலாளர்கள் அரவிந்தன், வெங்கடாசலம், மாவட்ட துணை செயலாளர் காமராஜ், ஒன்றிய அவை தலைவர் ரவிக்குமார் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story