11-ந் தேதி தி.மு.க. தேர்தல் அறிக்கை மு.க.ஸ்டாலின் தகவல்


11-ந் தேதி தி.மு.க. தேர்தல் அறிக்கை மு.க.ஸ்டாலின் தகவல்
x
தினத்தந்தி 4 March 2021 4:55 AM GMT (Updated: 4 March 2021 4:55 AM GMT)

தி.மு.க.வின் சட்டமன்ற தேர்தல் அறிக்கை 11-ந் தேதி வெளியிடப்படும் என்றும், மே 2-ந்தேதி மக்கள் எழுதும் வெற்றி தீர்ப்பை கட்டியம் கூறும் நாளாக இருக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உறுதி குலையாத பயணத்தில் களைப்பு தோன்றாதபடி ஊக்கமும் உத்வேகமும் அளிக்கின்ற வகையில், மார்ச் 1-ந்தேதி என்னுடைய பிறந்தநாளில் உங்களிடம் இருந்து குவிந்த இதயபூர்வமான வாழ்த்துகள் மனதிற்கு இதமளிக்கின்றன. என்னுடைய வேண்டுகோளை ஏற்று, நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்திடும் கட்சியினரின் கட்டுக்கோப்பான பணிக்கு பெருமையுடன் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

10 ஆண்டுகாலமாக தமிழகத்தை இருளில் தள்ளிய அ.தி.மு.க. ஆட்சியிடம் இருந்து தமிழகத்தை விடுவித்து, புதிய விடியலை உருவாக்கவும், எதிர்வரும் அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு புது வாழ்வு தரும் திட்டங்களை முன்வைக்கும் வகையிலும் லட்சியப் பிரகடனம் ஒன்று, தீரர் கோட்டமாம் திருச்சியில் மார்ச் 7-ந்தேதியன்று மாநாடு போல நடக்கவுள்ள சிறப்புக்கூட்டத்தில் வெளியிடப்படும். அந்த பிரகடனத்தின் 2 முக்கிய அம்சங்களில் ஒன்று, தமிழக வளர்ச்சிக்கான 7 முக்கிய வழிகாட்டுதலை விளக்குதல். மற்றொன்று, தமிழகத்திற்கான தொலைநோக்கு திட்ட ஆவணம் வெளியிடுதல்.

தொலைநோக்கு ஆவணம்

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அனைத்து துறைகளிலும் உயர்ந்தோங்கிய தமிழ்நாட்டை கவனமுடன் கட்டமைப்பதற்கான தி.மு.க.வின் மாபெரும் திட்ட அறிக்கையாக இது அமையும். இது கனவு அறிக்கையாக இல்லாமல், தமிழகத்தை மீட்டெடுக்கும் செயலை நிறைவேற்றும் செயல்திட்டமாக்கப்படும் என்ற உறுதியினை வழங்கி, அதற்கான பொறுப்பையும் மகிழ்வுடன் சுமந்திட நான் தயாராக இருக்கிறேன்.

தமிழக மக்களை நேரில் சந்தித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள், நடுநிலையாளர்கள், பல்துறை அறிஞர்களுடன் பலகட்டங்களாக நடத்திய செறிவான கலந்துரையாடல்களின் அடிப்படையில், 10 ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு துறையிலும் எட்டவேண்டிய இலக்கு துல்லியமாக வரையறுக்கப்பட்டு உள்ளது. அதனை திருச்சி சிறப்புக் கூட்டத்தில் வெளியிட்டதும், 20 நாட்களுக்குள் இந்த தொலைநோக்கு ஆவணத்தை தி.மு.க. தொண்டர்களும் முன்னணி நிர்வாகிகளும் வீடு வீடாக கொண்டு போய் சேர்த்து, தமிழகத்திலுள்ள 2 கோடி குடும்பங்களிடமும் இந்த தொலைநோக்கு பார்வை குறித்து விரிவான பரப்புரைகள் செய்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் தலையாய பணியும் காத்திருக்கிறது.

தேர்தல் அறிக்கை

இந்தப்பணி மட்டுமல்ல, ‘சொன்னதைச் செய்வோம்… செய்வதைச் சொல்வோம்’ என்ற கருணாநிதியின் வழியில், தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட இருக்கும் திட்டங்கள் குறித்த வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையும் இறுதி வடிவம் பெற்று வருகிறது. மக்களின் குறைகளை தீர்க்கவும், அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் வகைகளிலும் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

மக்களாட்சி எனப்படும் ஜனநாயகத்தின் மாண்பினை அடிப்படையாக கொண்டு, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்பது மக்களால் மக்களுக்காகவே, மக்களின் பங்கேற்புடன் உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் உருவாகியுள்ள தேர்தல் அறிக்கை 2006-ம் ஆண்டு கருணாநிதி கூறியதை போலவே தற்போதைய 2021 சட்டமன்றத்தேர்தலிலும் கதாநாயகனாக விளங்கும். தமிழக மக்களின் மனங்களை கவரும். தி.மு.க.வின் சட்டமன்றத்தேர்தல் அறிக்கையை மார்ச் 11-ந் தேதி வெளியிட இருக்கிறேன்.

சோர்ந்திடாமல் பணியாற்றவேண்டும்

அதற்கு முன்பாக, விருப்பமனு கொடுத்தவர்களிடம் மாவட்டவாரியாக நேர்காணல் நடந்து வருகிறது. தோழமை கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை அதற்கென அமைக்கப்பட்ட குழு சுமுகமாகவும், வெற்றிகரமாகவும் மேற்கொண்டு வருகிறது.

தேர்தல் களத்தில் இவை இரண்டும் பெரும்பணி மட்டுமல்ல, தி.மு.க.வின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ள தமிழக மக்களுக்கு நாம் நிறைவேற்றவேண்டிய கடமையும் பொறுப்புமாகும். அதனை வெற்றிகரமாக நிறைவேற்றிட, தேர்தல் களத்தில் இமைப்பொழுதும் சோர்ந்திடாமல் பணியாற்ற வேண்டிய கடமை உடன்பிறப்புகளாகிய உங்களுக்கும் இருக்கிறது. உங்களில் ஒருவனான எனக்கும் இருக்கிறது. சோர்வின்றி உழைத்திடுவதற்கான அருமருந்தாகத்தான் என் பிறந்தநாளில் உங்களிடமிருந்து அன்பு தவழ கிடைத்த வாழ்த்துகளை கருதுகிறேன்.

வெற்றியை கட்டியம் கூறும் நாள்

அறிவாலயத்திலும், இல்லத்திலும் நேரில் வந்து வாழ்த்திய, சமூக வலைதளங்களை வாழ்த்துகளால் நிரப்பிய எல்லோருடைய உளப்பூர்வமான வாழ்த்துகளால் கூடுதல் உற்சாகத்துடன் உழைப்பினை தொடர்கிறேன். அத்தகைய வாழ்த்துகளை வழங்கிய அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் வாழ்த்து பூக்களை தேர்தல் களத்தில் வெற்றிமாலையாக தொடுத்து, கருணாநிதியின் ஓய்விடத்தில் காணிக்கையாக்குவதற்காக உங்களில் ஒருவனான நான் காத்திருக்கிறேன். களைப்பின்றி கடமையாற்றுகிறேன்.

மார்ச் 1-ந்தேதி எனக்கு பிறந்தநாள் என்றாலும், தமிழகத்தின் விடியலுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் அடங்கிய தி.மு.க.வின் லட்சியப் பிரகடனத்தை வெளியிடும் மார்ச் 7 -ந்தேதி நமக்கான சிறந்த நாள். ஏப்ரல் 6-ல் மக்கள் எழுதப்போகும் வெற்றித்தீர்ப்பையும், மே 2-ந்தேதியன்று தி.மு.க. அதனை அதிகாரபூர்வமாகப் பெறப் போவதையும் கட்டியம் கூறும் நாள். தி.மு.க. வரலாற்றில் திருப்புமுனைகள் பலவற்றை தந்த திருச்சியில் மார்ச் 7-ந்தேதியன்று திரண்டிடுவோம். தமிழகத்தை 10 ஆண்டுகளாக பிடித்து ஆட்டுகின்ற அ.தி.மு.க. எனும் காரிருளை விரட்டி, உதயசூரிய கதிரொளி பரப்பிடும் பிரகடனத்தை வெளியிடுவோம். தமிழக மக்களின் கைகளில் அதனை ஒப்படைத்து, வெற்றியினை உறுதிப்படுத்திட சூளுரைப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story