அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தார்


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தார்
x
தினத்தந்தி 12 March 2021 8:56 AM GMT (Updated: 12 March 2021 9:10 AM GMT)

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

சென்னை:

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்தமாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடக்கிறது. அதனுடன் காலியாக உள்ள கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

தேர்தலுக்கு இன்னும் 25 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீட்டை முடிக்கும் நிலையில் உள்ளன. அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. மேலும் சிறுசிறு கட்சிகளும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து விரைவில் பெயரை அறிவிக்க உள்ளன.

இந்தநிலையில் சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. பிற்பகல் 3 மணிவரை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வேட்புமனுதாக்கலுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. மனுதாக்கலின் போது வேட்பாளர்களுடன் செல்வதற்கு 2 பேரை மட்டுமே அனுமதித்தனர்.

இந்நிலையில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு ஓ. பன்னீர் செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், அதிமுக சார்பில் போடி தொகுதியில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று போடி தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன், அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என கூறினார்.

Next Story