தமிழகத்தில் தேர்தல் செலவினம் அதிகமுள்ள தொகுதிகள் எவை? அலுவலர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை


தமிழகத்தில் தேர்தல் செலவினம் அதிகமுள்ள தொகுதிகள் எவை? அலுவலர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
x
தினத்தந்தி 23 March 2021 10:10 PM GMT (Updated: 23 March 2021 10:10 PM GMT)

தமிழகத்தில் தேர்தல் செலவினம் அதிகமுள்ள தொகுதிகள் எவை என்பது பற்றி கண்டறிய அனைத்து அலுவலர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.

தேர்தலுக்காக திட்டமிட்ட பணிகள் அனைத்தும் உரிய நேரத்தில் நடைபெற்று வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தில் பதற்றமான தொகுதிகள், தேர்தல் செலவு அதிகமுள்ள தொகுதிகள் (பணப் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் அதிகம் வழங்கப்படும் இடங்கள்), சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடிய தொகுதிகள் ஆகியவற்றை அடையாளம் காணும் பணியில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது.

ஆலோசனை கூட்டம்

இதற்கான அவசர ஆலோசனை கூட்டத்தை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று மாலை 5 மணிக்கு கூட்டினார். காணொலி காட்சி மூலம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தேர்தல் பதிவு அதிகாரிகள், சிறப்பு தாசில்தார்கள் (தேர்தல்) ஆகியோர் பங்கேற்றனர்.

நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம், இரவு 7 மணி வரை நீடித்தது. இந்த கூட்டத்தில் தேர்தல் சோதனை நடவடிக்கைகள், அதில் கைப்பற்றப்பட்ட பொருட்கள், சந்தேகத்துக்கு இடமான பணப் பரிமாற்றங்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தேர்தல் செலவினம்

மேலும், தேர்தல் செலவினம் அதிகம் ஏற்படக்கூடிய தொகுதிகளை அடையாளம் காண்பது, தபால் ஓட்டுகள் வினியோகம், பதற்றத்துக்குரிய தொகுதிகளை கண்டறிவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தயார்நிலை, வாக்குப்பதிவை நேரலையில் ஒளிபரப்புவதற்கான முன்னேற்பாடுகள் உள்ளிட்ட அம்சங்கள் பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Next Story