தி.மு.க.வினர் சொற்களை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். கண்ணியக் குறைவை தலைமை ஏற்காது- மு.க.ஸ்டாலின்


தி.மு.க.வினர் சொற்களை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். கண்ணியக் குறைவை தலைமை ஏற்காது- மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 27 March 2021 11:53 AM GMT (Updated: 27 March 2021 11:53 AM GMT)

தி.மு.க.வினர் சொற்களை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். கண்ணியக் குறைவை தலைமை ஏற்காது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

சென்னை

ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு அடங்கிய காணொலி, பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து பெரம்பலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார். 

முதலமைச்சர் பழனிசாமியை நான் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை முதல்வர் குறித்து நான் பேசியது வெட்டி ஒட்டி சித்தரிக்கப்பட்டது என கூறி உள்ளார்.

முதலமைச்சரையும், அவரது தாயாரையும் இழிவுபடுத்தும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசியதற்குப் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல்களில் ஒவ்வொரு கட்சியும் தங்களின் சாதனைகளையும், எதிர்க்கட்சிகளின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையிலான குறைகளையும் மக்களிடம் எடுத்துரைப்பதுதான் நாகரீகம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சரையும் அவரது தாயாரையும் இழிவுபடுத்தும் வகையில் ஆ.ராசா பேசியது அருவெறுக்கத் தக்கது, கண்டனத்துக்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார்

இதனிடையே முதலமைச்சரைத் தரக்குறைவாகப் பேசியதாக கூறி ஆ.ராசாவைக் கண்டித்துச் சென்னையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா தேர்தல் பரப்புரையின்போது முதலமைச்சர் பற்றியும் அவர் தாய் பற்றியும் பேசினார்.

இதைக் கண்டித்துச் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் அதிமுகவினர் நூற்றுக்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.  இதேபோல் மயிலாப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் ஆ.ராசாவின் உருவப்பொம்மையை எரித்தனர்.

இந்த நிலையில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில் 

தி.மு.க.வினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டி - ஒட்டி,  தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப்போதும் தோல்வி பயத்தால் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க.வினர் சொற்களை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். கண்ணியக் குறைவை தலைமை ஏற்காது  என கூறி உள்ளார்.


Next Story