சைதாப்பேட்டையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் சைதை துரைசாமி எடப்பாடி பழனிசாமி பிரசாரம்


சைதாப்பேட்டையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் சைதை துரைசாமி எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
x

‘‘சைதாப்பேட்டையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் சைதை துரைசாமி’’ என்று தேர்தல் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை, 

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரும், பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயருமான சைதை துரைசாமிக்கு ஆதரவாக, குமரன் காலனியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தனி முத்திரை

சைதாப்பேட்டை எம்.எல்.ஏ.வாக இருந்து, இந்த தொகுதி ஏற்றம் பெற, வளர்ச்சி பெற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் சைதை துரைசாமி. சைதை என்றாலே துரைசாமி தான் ஞாபகத்துக்கு வருவார். தனக்கென ஒரு தனி முத்திரையை இந்த தொகுதியில் பதித்துள்ளார். அவர் தன்னலம் இல்லாமல், அர்ப்பணிப்பு உணர்வோடு சேவையாற்றக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர். அப்படிப்பட்ட வேட்பாளர் வெற்றிபெற்று வரும்போது இந்த தொகுதி மேலும் வளர்ச்சி பெறும், உங்கள் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும். அதற்கு நீங்கள் எல்லாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

சைதை துரைசாமி என்னை விட வயது மூத்தவர். என்னை விட சிறப்பாக செயல்படக்கூடியவர். மேயராக இருந்த காலத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து, இந்த மாநகர மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து மக்களின் மனதில் இடம்பிடித்தவர். இப்படிப்பட்ட திறமையான வேட்பாளரை இறைவன் உங்களுக்கு கொடையாக தந்துள்ளார். அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பை தாருங்கள்.

எம்.ஜி.ஆர். மனதில் தனி இடம்

இதே தொகுதியில் தி.மு.க சார்பில் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் போட்டியிடுகிறார். அவரையும், நமது வேட்பாளரையும் ஒப்பிட்டு பாருங்கள். மேயராக இருந்தபோது யாருடைய நிர்வாகம் சிறந்த நிர்வாகம்? என்று சிந்தியுங்கள். அதில் சைதை துரைசாமி தான் நம்பர் ஒன். மேலும் மனிதநேய அறக்கட்டளை நடத்தி, தமிழ் மண்ணில் நம் குழந்தைகள் உயர் பதவிகளுக்கு வருவதற்கு துணை நிற்கிறார். தன்னலமற்றது மனிதநேய அறக்கட்டளை. பலரின் வாழ்க்கை உயர்வதற்கு தூணாக இருந்தவர். சிலரிடம் பணம் இருக்கும் மனம் இருக்காது. பணமும், மனமும் இருக்கின்ற ஒரே வேட்பாளர் சைதை துரைசாமிதான். எம்.ஜி.ஆரின் நன்மதிப்பை பெற்றவர். அவரது மனதில் தனி இடத்தை தக்க வைப்பது எளிதான காரியமல்ல.

மேயராக இருந்த காலத்தில் சென்னையில் சாலைகள், பாலங்கள், பூங்காக்கள், தெருவிளக்குகள் என 3 லட்சத்து 2 ஆயிரம் பணிகளை சைதை துரைசாமி செய்துள்ளார். ஆனால் மா.சுப்பிரமணியம் காலத்தில் 9,500 பணிகள் தான் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கிறது. ஒரு திறமையான மனிதர் பொறுப்பில் இருந்தால் தான், அந்த நிர்வாகம் திறமையாக இருக்கும். அப்படிப்பட்ட திறமையான மனிதர் நம்முடைய வேட்பாளராக கிடைத்திருக்கிறார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால்...

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அராஜகம் வந்துவிடும், அடாவடித்தனம் வந்துவிடும், அட்டூழியங்கள் தான் நடக்கும். தி.மு.க.வினர் பெண்களை எந்த அளவிற்கு இழிவாக பேசுகிறார்கள் என்பதை எண்ணி பாருங்கள். இதற்கெல்லாம் தகுந்த தண்டனையை தாய்க்குலங்கள் வழங்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதே இப்படி பெண்களை பற்றி இழிவாக பேசுகிறார்கள். ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட்டால் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியுமா? இதையெல்லாம் எண்ணி பாருங்கள். சைதை துரைசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story