மொழி, இனம், கலாசாரத்தை பாதுகாக்க மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க வேண்டும் கொளத்தூரில் ப.சிதம்பரம் பிரசாரம்


மொழி, இனம், கலாசாரத்தை பாதுகாக்க மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க வேண்டும் கொளத்தூரில் ப.சிதம்பரம் பிரசாரம்
x
தினத்தந்தி 31 March 2021 9:07 PM GMT (Updated: 31 March 2021 9:07 PM GMT)

தமிழ்நாட்டின் மொழி, இனம், கலாசாரத்தை பாதுகாக்க மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்று கொளத்தூரில் பிரசாரம் மேற்கொண்ட ப.சிதம்பரம் கூறினார்.

சென்னை, 

சென்னை கொளத்தூரில் போட்டியிடும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து மக்காராம் தோட்டம் பகுதியில் நேற்றிரவு பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெ.டில்லிபாபு ஆகியோர் தலைமை தாங்கினர்.தொ.மு.ச. பொருளாளர் நடராசன், தி.மு.க. துணை செயலாளர் தேவஜவஹர் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசியதாவது:-

வெற்று நடை

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு வெற்றி நடைபோடவில்லை. வெற்று நடை தான் போடுகிறது. எந்தவகையில் தமிழ்நாடு 10 ஆண்டுகளில் முன்னேறி இருக்கிறது? நான் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 105 டாலராக இருந்தது. பெட்ரோல் லிட்டர் ரூ.60-க்கும், டீசல் ரூ.55-க்கும், சமையல் கியாஸ் ரூ.410-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தற்போது கச்சா எண்ணெய் விலை உயரவில்லை. 70 டாலராக குறைந்து இருக்கிறது. ஆனால் பெட்ரோல் ரூ.94-க்கும், டீசல் ரூ.87-க்கும், சமையல் கியாஸ் ரூ.835 ஆகவும் விற்கப்படுகிறது. 94 ரூபாயில் 33 ரூபாயை வரியாகவும், 87 ரூபாயில் 32 ரூபாயை வரியாகவும் மோடியும், எடப்பாடி பழனிசாமியும் உறிஞ்சுகிறார்கள்.

அடிமையாக இருக்கக்கூடாது

மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக தான் இருக்க வேண்டும். ஆனால், அடிமையாக இருக்கக்கூடாது. பிரதமர் நரேந்திர மோடியும், எடப்பாடி பழனிசாமியும் ஒரே மேடையில் நாளை பிரசாரம் செய்கிறார்கள். அப்போது, இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஏன் ஆதரிக்கவில்லை? மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கதி என்ன? குடியுரிமை திருத்தச்சட்டத்தை விலக்கி கொள்வீர்களா? ஆகிய 3 கேள்விகளை மோடியிடம் எடப்பாடி பழனிசாமி கேட்க வேண்டும். அதற்கு மோடி பதில் சொல்ல வேண்டும்.

இந்த 3 கேள்விகளையும் நீங்கள் கேட்டால் அண்ணா, காமராஜர், கருணாநிதி ஆகியோர் அமர்ந்த முதல்-அமைச்சர் நாற்காலியில் நீங்கள் அமர்வதற்கு தகுதியானவர் என்று எடுத்துக்கொள்ளலாம். எடப்பாடி பழனிசாமி ரூ.4.85 லட்சம் கோடி கடனை விட்டுவிட்டு போகப்போகிறார். 2020-2021-ம் ஆண்டு வருவாய் பற்றாக்குறை ரூ.65 ஆயிரத்து 994 கோடி ஆகும். இதற்கு மேலும் கடன் வாங்க வேண்டும். எனவே, புது வருடத்தில் தமிழக அரசின் கடன் ரூ.5.5 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கும்.

200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்

வெற்றுப்பேச்சு அரசு வேண்டாம். நம்முடைய குரலை கேட்டு செவிமடுத்து செயல்படுகிற அரசு தான் வேண்டும். நம்முடைய கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது எனது ஆசை ஆகும். குறைந்தபட்சம் 200 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்பது லட்சியமாக இருக்க வேண்டும்.

ஏனென்றால், கோவா, மணிப்பூர், அருணாச்சலபிரதேசம், மத்தியப்பிரதேசம் தேர்தலில் வெற்றி பெற்றது காங்கிரஸ் கட்சி. ஆனால், பா.ஜ.க. தேர்தலை திருடிக்கொண்டது. தமிழ்நாட்டின் இனம், மொழி, கலாசாரத்தை பா.ஜ.க.விடம் இருந்து காப்பாற்றுவதற்கு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சர் அரியணையில் அமர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளர் ஹசீனா சையத், மாநில செயலாளர் அகரம் கோபி, இமயா கக்கன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story