வருமானவரி சோதனை நடத்தி மிரட்டுகிறார்கள்; அது பலிக்காது - கனிமொழி எம்.பி. பேச்சு


வருமானவரி சோதனை நடத்தி மிரட்டுகிறார்கள்; அது பலிக்காது  - கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 2 April 2021 9:30 AM GMT (Updated: 2 April 2021 9:30 AM GMT)

அதிமுகவின் தோல்வி பயத்தால் திமுகவினர் வீடுகளில் வருமானவரி சோதனை நடைபெறுகிறது என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.

தென்காசி,

தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், அரசியல் கட்சியினர் மக்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தினர் பறக்கும்படைகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல வருமான வரித்துறையினரும் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இதற்டையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் மகள் செந்தாமரை மற்றும் அவரது கணவர் சபரீசன் இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். அதேபோல், அண்ணாநகர் திமுக எம்.எல்.ஏ. மோகனின் மகன் கார்த்திக்கின் வீடு மற்றும் அவருக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அறவக்குறிச்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜிக்கு சொந்தமான பகுதியிலும் வருமானவரி சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கட்சி சார்ந்தவர்களை குறிவைத்து இன்று அடுத்தடுத்து நடத்தப்பட்டு வரும் வருமானவரி சோதனை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திமுக கட்சியினர் மீதான வருமானவரி சோதனைக்கு திமுக மகளிரணி செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கனிமொழி வருமானவரி சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

பிரசாரத்தின்போது பேசிய கனிமொழி, வருமானவரி சோதனை நடத்தி மிரட்டுகிறார்கள், அது பலிக்காது. அதிமுகவின் தோல்வி பயத்தால், திமுகவினர் வீடுகளில் வருமானவரி சோதனை நடைபெறுகிறது’ என்றார்.

Next Story